Monday, December 18, 2006

நா. முத்து நிலவன் கருத்துக்கு மறுப்புரை



18.12.2006 - Monday
திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? - சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்!


இரா. பானுகுமார்,
சென்னை.
____________________________________________

கவிக்கோ அப்துல் ரகுமான் "திருக்குறள் ஒரு சமண் நூல்" என்று சொன்னதற்கு மறுப்பாக திருவாளர். நா.முத்து நிலவன் என்பார் எழுதியதிற்கு என் மறுப்பை பின்னூட்டாக எழுதுகிறேன்.

நா.முத்து நிலவன் எழுதிய மறுப்புரையை இங்கே பார்க்கலாம்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60408055&format=html

திருக்குறள் ஒரு சமண நூல்தான்!


>>>>>>>>>>>>>>"*புத்தனுக்குரிய 'பகவன் ' எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா ?"என்று வினவுகிறார்.<<<<<<<<<<<<<<


என் பதில்:


"பகவன்" என்ற சொல் அருக பகவானுக்கு வழங்கப்படவில்லையா? எல்லா தமிழ் நிகண்டுகளும் "அருகனு"க்கும் "பகவன்" என்ற பெயர் உண்டு என்று பறைச்சாற்றுகின்றன! ஆனால், தாங்கள் அச்சொல் புத்தனுக்கே உரியது என்கிறீர்கள். முதல் குறளில் உள்ள "பகவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. அக்குறளில் உள்ள "ஆதிபகவன்" என்ற சொற்றொடரைச் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். அச்சொற்றொடருக்கு "ஆதியில் தோன்றிய பகவன்" அல்லது "முதல் பகவன்" என்று பொருள் வரும். இப்படிப் பொருள் கொண்டால், திருக்குறளில் வரும் பகவன் என்ற சொல் புத்தரைக் குறிப்பதாகாது.


அச்சொல் புத்தரைத்தான் குறிக்கும் என்றால், அக்குறளில் பொருள் குற்றம் ஏற்படும். புத்தபெருமான் இவ்வுலகின் கண் தோன்றிய முதல் "பகவன்" என்றாகிவிடும். அதற்கு பெளத்த இலக்கியங்களில் சான்றில்லாமையாலும் மற்றும் சத்தியபிரமாணம் இல்லாமையாலும் பெறப்படும். மாறாக, புத்தர் பெருமான் தோன்றுவதற்கு முன்னமே அருகர்கள் (சமண தீர்த்தங்கரர்கள்) தோன்றியுள்ளார்கள் என்பது வரலாறு. இதை பெளத்த இலக்கியங்களும் அரண் செய்யும். மேலும், கடைசி தீர்த்தங்கரராக போற்றப்படும் "வர்த்தமான மகாவீரர்", புத்தரைவிட காலத்தால் மூத்தவர் என்பதனாலும் இது உறுதிப்படும். இதனால், புத்தரை "ஆதிபகவன்" என்ற சொற்றொடர் குறிக்கா என்பதும் பெறப்படும்.


சரி! அச்சொற்றொடர் யாரை குறிக்கிறது? எனில்! சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும் "ஆதிநாத"ரைத் தான் அச்சொற்றொடர் குறிக்கும். சமண வரலாற்றின்படி நிகழ்க்கால தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அதில், முதல் தீர்த்தங்கரராகக் கருதபடுபவர் "ரிஷபதேவர்" என்று அழைக்கப்படும் "ஆதிபகவன்" ஆவார். இருபத்துநான்காவது சமண தீர்த்தங்கரர் "வர்த்தமான மகாவீரர்". இவர் புத்தபெருமானின் சமக்காலத்தவர் எனபதும் கருத்தில் கொள்ளவேண்டும்.


இதையே சற்று விரிவாகப் பார்க்கலாம். அஃதாவது, "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற அடியை நோக்கும்போதுஅகரம் எழுத்துக்கெல்லாம் முதலாக வருவதுபோல் முதல் தீர்த்தங்கரரான "ஆதிநாதர்" மற்ற தீர்த்தங்கரர்களுக்கு முதலாக உள்ளார் என்பதுவும் சிந்திதற்பாலது. இதற்கு சான்றாக கீழ் வருவனவற்றைக் காணலாம்.


"தத்வார்த்த சூத்திரம்" என்னும் சமண நூலுக்கு "அகளங்க தேவர்" என்னும் சமணப் பன்மொழிப் புலவர் உரையெழுதியிருக்கிறார். அவர் 11ஆம் சூத்திரத்திற்கு உரையெழுதுகையில்,


"அகாரா தயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகரா இதி"
என்னும் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

இதற்கு, "எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன,தீர்த்தங்கரர்களில் விருஷப தேவரை முதலாக உடையவர்" என்று பொருள். இந்த சூத்திரம் அப்படியேதிருக்குறளின் முதற்ப் பாட்டாக வருவதும் என் கருத்தை அரண் செய்யும்.


"ஆதிபகவன்" என்ற சொற்றொடரை அப்படியே எடுத்தாளும் மற்ற சமண தமிழ் நூற்களை கீழே காணலாம்.


1. "ஆதிபகவனை அருகனை மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே" - திருக்கலம்பகம்


2. "ஆதிபகவன் அசோக வசலன் சேதிபமுதல்வன் சினவரன் தியம் பகன்" - திருப்பாமாலை


3. "அத்தனே என்னை ஆளிர் சரணம் ஆதி பகவன் அருளே சரணம்" - தோத்திரத் திரட்டு


4. "செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன்" - சிலப்பதிகாரம்


இதுபோல் "ஆதிபகவன்" என்ற சொற்றொடரை ஆளும் பெளத்த நூற்களையோ, அல்லது மற்ற சமய நூற்களையோசுட்டினால், அது ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும்.


>>>>>>>>>>>" 'பகவான் ' என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு 'உட்கவரப்பட்ட ' ஒரு சொல். (இதே பெயர் சமணருக்கும் உண்டெனினும், அது புத்தருக்குரியதுபோலப் பிரதானமான பெயரல்ல என்பது கவனிக்கத்தக்கது) ">>>>>>>>>>>


என் பதில்:


மேலே சொன்ன கருத்துக்கள் மூலம் திருக்குறளில் வரும் "பகவன்" என்ற சொல் இங்கு "சமண கடவுளான அருகனையே" சுட்டும் என்பதும் "ஆதிபகவன்" என்ற சொற்றொடர் அருகனைத்தவிர மற்ற கடவுளைக் குறிக்கா என்பதுவும் உள்ளங்கை நெல்லிக்கனி.


>>>>>>>>>>>" * 'அறிவன் '- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது."<<<<<<<<<<<


என் பதில்:


இவ்வாறு "Sweeping statement" ஆக சொல்வதின் மூலம் தங்களுக்கு சமண நூற்களில் பயிற்சி இன்மையைத்தான்காட்டுகிறது. "அறிவன்" என்ற சொல் அருக பகவானுக்கும் உண்டு. அவற்றையும் ஈண்டு காட்டுதும்.


1. " கடையிகந்த காட்சியொடு - கடையிகந்த வாலறிவன்" - திருக்கலம்பகம்


2. " இலங்கொளி முக்குடை யெந்திரத் தியங்க அறிவர் சரிதம் முறையிற் காட்டி" - பெருங்கதை


3. " அறிவினாலறியாத அறிவநீ" - மேருமந்திர புராணம்


4. " உலகமூன்று பொருங்குட னேத்துமாண் டிலகமாய திற லறிவன்னடி" - வளையாபதி


5. " அறிவன் அறவோன் அறிவுவரம்ப இகந்தோன்" - சிலப்பதிகாரம்


என்று சமண இலக்கியங்கள் பேசுவதன் மூலம் "அறிவன்" என்பது சமண கடவுளுக்கும் உண்டு என்பதாகிறது.


>>>>>>>>>>>>" * 'மலர்மிசை ஏகினான் ' - என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. (புத்தரின் பாதங்களில் தாமரை மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப் பெயரான 'ததாகதா ' என்பதற்கு 'இவ்விதம் சென்றவன் '-ஏகியவன்- என்பது பொருள்) "<<<<<<<<<<<<


என் பதில்:


இதுவும் தங்களின் ஒருமுகமான "Sweeping statement" தான். "மலர்மிசை ஏகினான்" என்ற சொற்றொடர் அருகருக்கும் உண்டு.


1. " விரிபூந்தாமரை மேற்சென்ற திருவாரடி யேந்தி" - சீவக சிந்தாமணி


2. " விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்" - சூளாமணி


3. " பூவின்மேல் சென்றான் புகழடியை" - அறநெறிச்சாரம்


4. " பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்" - நேமிநாதம்


5. " மருவார் மலர்பிண்டி மன்னா நமஸ்தே வண்டாரு மலர்மேல் நடந்தாய் நமஸ்தே" - தோத்திரத்திரட்டு


6. " மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்" - சிலப்பதிகாரம்


என்பதன் மூலம் அருகருக்கும் அப்பெயர் உண்டென்றாகிறது.


சிரமண மதப் பிரிவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் மதங்கள் சமணம், பெளத்தம், ஆசிவகம் என்பன.இவற்றுள் சமணமே (ஜைனம்) காலத்தால் முந்தியது. சமணத்தில் இருந்தே பெளத்த, ஆசிவக மதங்கள்தோன்றின. அதனால் சமணத் தாக்கங்கள் பெளத்ததிலும், ஆசிவகத்திலும் உண்டு. சிறு, சிறு வேறுபாடுகள் உண்டெனினும் அவைகள் ஒரே பாரம்பரியத்தில் இருந்து வந்ததுதான். சில பல காரணங்களால் ஆசிவகம்தற்போது அடியோடு மறைந்துவிட்டது. அதே போல், பெளத்தம் பாரத மண்ணில் நிலைப்பெற முடியாமல், நம்பக்கத்து தேசங்களில் (சீனம், திபேத்து, இலங்கை, பர்மா, தாய்லாந்து) நிலைப்பெற்றது. ஆனால் ஒரு காலத்தில்பெருசமயமாக இருந்த சமணம் தற்போது சிறுபான்மை சமயமாகக் குன்றிவிட்டது.


ஆங்கிலேயர்கள் காலத்தில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் பார்வை பெளத்தம் மேல் பட்டதன் விளைவாகபெளத்த மதத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நூற்கள் எழுதப்படலாயின. இதன் காரணமாக பெளத்தம் பற்றிஉலகளாவியப் பார்வை ஏற்பட்டது. இது நல்லதுதான். என்றாலும், அந்த ஆராய்ச்சியை நிறைய அறிஞர்கள்வேறு கோணத்தில் புரிந்துக்கொண்டனர். அப்புரிதல் சில விளைவுகளை ஏற்படுத்தியதை நாம் உணர மறந்துவிட்டோம். அந்த விளைவுகள் தான் இன்றளவும் ஆராய்ச்சி உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன.



>>>>>>>>>>>>"(1)துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக,இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா ? குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம். டுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக 'தன்னைக் கட்டும்தவம் ' வலியுறுத்தப் பட்டது -சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமண நூலாக முடியும் ? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)"<<<<<<<<<<<<


என் பதில்:


இவ்வாறு சொல்வதன் மூலம் தாங்கள் நேரிடையாக சமணம் பற்றியறியவில்லை என்பது புலனாகிறது. மற்றவர்ஆராயாமல் சொன்ன கருத்துக்களை அப்படியே இங்கே சொல்கியிருக்கிறீர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி. பாரதவரலாற்றில் முதன்முதலில், இல்லறம் என்றும் துறவறம் என்றும் பிரித்து மகக்ளை நல்வழிப்படுத்தியவர்கள் சமணர்களேஆவர். இல்லறம் இல்லையேல் துறவறம் பயனற்றது என்று துணிந்து சொன்னவர்கள் சமணர்களேயாவர்.


"சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான் மனையறமுந் துறவறமும் மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடு கட்டியை யுரைத்த தொன்மைசால் மிகுகுணத் தெம் துறவரசைத் தொழு தேத்த நன்மைசால் வீடெய்து மாறு" -யாப்பருங்கலக்காரிகை மேற்கோள் உரை


இல்லறத்தைப் போற்றி தமிழிலும், வடமொழிகளிலும் நிறைய சமண நூற்கள் எழுந்திருக்கின்றன. உதாரணமாக,தமிழில் தோன்றிய அறநெறிச்சாரம், அருங்கல செப்பு போன்ற நூற்களும் சிராவகச்சாரம், சமணசுத்தம் போன்ற வடமொழிநூற்களையும் சொல்லலாம்.


சான்றாக ஒன்றைப் பார்போம்:


" நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்

நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - யாப்புடைக்

காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி

ஆழிசூழ் வையத்து அறம்" -அறநெறிச்சாரம்


இல்லற நோன்பிகள் இல்லாமல் துறவிகள் தத்தம் கடமையை ஆற்ற முடியாது. அதுபோல் துறவற விரதிகள் வழிக்காட்டுதல்இல்லாமல் இல்லறம் முறையாக நடைபெறா என்பதைத்தான் மேற்சொன்ன பாடல் இயம்புகிறது. எனினும், இல்லறத்தார்க்குவீடுபேறு இல்லாமையால், வீடுபேறு வேண்டுவோர் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் சமணம் சொல்கிறது.

அதனால்,சமணம் இல்லறத்தை வெறுத்தது என்றால் எப்படி? :-)

திருக்குறளும் இவ்வுண்மையையே பகர்கிறது. இல்லறத்திலேவீடுபேறு அடையலாம் என்று எந்தக் குறள் சொல்கிறது சொல்லுங்களேன்.


மேலும், தாங்கள் "குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம்"என்று எழுதியிருக்கிறீர்கள்.


தேவர் (குறள் ஆசிரியர்) கொல்லாமை, புலால் மறுத்தல், தவம், கூடா வொழுக்கம் போன்ற அதிகாரங்களில் சமண கெடக்குப்பிடிநிறையவே கையாண்டிருக்கிறார். விரிவஞ்சி விடுக்கிறேன்.


"(காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)" என்றும் எழுதியிருக்கிறீர்கள்.


சிவக சிந்தாமணியை யார் எழுதியது ஐயா. அதற்கு மணநூல் என்ற பெயரும் உண்டு இல்லையா? (ஹி..ஹி...)


>>>>>>>>>>>(2) 'உழவே செய்யக்கூடாது - செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும் ' என்பது சமணக் கோட்பாடு. எனில், 'உழவே தலை ' என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும் ? இவை போலும் கேள்விகள் ஏராளம் ஏராளம்! <<<<<<<<<<

என் பதில்:


என்னடா வம்பா போச்சு? உழவே செய்யக்கூடாது என்று எந்த தமிழ் சமண இலக்கியத்தில் இருக்கிறது. முதன்முதலில் வாழ்வியலை "இல்லறம்" என்றும் "துறவறம்" என்று பிரித்தது சமணம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன்.


புலால் உடன்பாடென்றானால், செத்தது, சாவாதது, ஓடுவது, ஒடாதது, பறப்பது, பற்ப்பாதது (:-), நடப்பது, நடப்பாதவது என்று எல்லாத்தையும் ஒரு கைப் பார்க்கலாம். ஆனால், இல்லறத்தாராகட்டும், துறவிகளாகட்டும் இருசாராருமே புலால மறுத்தவர்கள். இல்லறத்தார் உழவு செய்யவில்லையென்றால் அவர்களுக்கு புவா (உணவு) எங்கிருந்து கிடைக்குமாம்?.


முதன்முதல் இவ்வுலகிற்கு அறம் உரைத்தவர் முதல் சமண தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும்"ரிஷபதேவரே ஆவார். அவரே அறுதொழில்களை வகுத்தவர்.

வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி மற்றும்சிற்பம் என்பனதான் அவைகள்.
"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம் விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்" -சூடாமணி நிகண்டு


என்ற பாடலின் மூலம் அதையறியலாம். இதனால் சமணர்கள் உழவை ஆதரித்தார்களேயன்றி உழவு செய்யக்கூடாது என்று யாங்கணும் சொல்லவில்லை என்பது நிதர்சணம்.



தாழ்மையுடன்,


இரா.பானுகுமார்,

சென்னை.


மின்னஞ்சல்:

banukumar.r@gmail.com,

banukumar_r@yahoo.com

Blog: http://banukumar_r.blogspot.com/

Tuesday, November 28, 2006

ஆசிவகம் 3



ஆசிவகம் 3


தொல்பொருள் துறையினரின் அலட்சியப் போக்குக் குறித்து ஆசிவகம் 2 ல் குறித்திருந்தேன். மேலும், சமண மத ஆதாரங்கள் இந்து மத ஆதாரமாக மாறலாம் என்றும் எழுதியிருந்தேன். சில அன்பர்கள் ஆதாரம் இல்லாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆதாரம்தான் என்ன? ஒரு பேராசிரியர், க.நெடுஞ்செழியன்என்பார், சமணத் துறவியான இளங்கோவடிகள் செய்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் "ஆசிவகம்" சார்ந்தது என்று எழுதியிருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஆசிவகம் தான் பின்னாளில் "வைணவம்" ஆனது என்று சொல்கிறார். சரி. தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

சமீபத்தில் என் நண்பர் திருப்பதிசாமி தொலைபேசியில் அழைத்து சிலப்பதிகாரம், சிற்றண்ணவாயில் ஆகியவை ஆசிவகம் சார்ந்தது என்று பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல் நேரிலே வந்து பேரா.க.நெடுஞ்செழியனின் அந்த இரண்டு புத்தகங்களையும் பரிசாக கொடுத்தார். படித்துவிட்டு இதற்கு தக்க மறுப்பு எழுதுமாறும் கேட்டுக் கொண்டார். :-)

அந்த புத்தகங்கள் இதுதான்:

1. சங்கக்காலத் தமிழர் சமயம்.
2. சித்தண்ண வாயல்

கிடைக்கும் இடம்:

பாலம்இ/7,
பாரத் அடுக்ககம்,
ஆர்.வி. நகர்,அண்ணா நகர் கிழக்கு,
சென்னை - 102

பேராசிரியர் நிறைய சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு என்ன பயன்?. சான்றுகள் இல்லாமல் அவர் தன் கற்பனை குதிரையை (எருது? ;-) புத்தகம் முழுக்கஅலையவிட்டுருக்கிறார். சான்றுகளாக அவர் கூறும் இடங்கள் எல்லாம் சமண (ஜைன)நூல்களிலிருந்து தான் சான்றாக தருகிறார். யான் ஈங்கு எடுத்துக்காட்டுதும்!

"திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்"

என்பது சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் முதல் பாடலாக வரும் பாட்டு. இந்தப் பாட்டில்கூறப்பட்டிருக்கும் தெய்வம்தான் என்னை? இதற்கு எந்த உரையாசிரியரிடமும் போக வேண்டாம். இந்தப் பாட்டு "அருக பகவானை"ப் போற்றுகிறது. இதில் ஐயத்திற்கு கிச்சித்தும் இடனில்லை. இந்தப்பாட்டு அருகனைத்தான் குறிக்கிறது என்பதற்கு, இந்தப் பாட்டில் Key word"ஆக இருக்கும் "திரு முக்குடை", " பிண்டி", "அறிவனை", "கந்தன் பள்ளி" என்ற சொற்களுக்கு விளக்கம் பெற புகுந்தாலே உண்மைப் புலப்படும். ஆனால் ஏனோ நம்ம பேராசிரியர் மற்ற சொற்களை விட்டுவிட்டு "அறிவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி, சுற்றி வந்து பொருள் கூற சிரமப்பட்டிருக்கிறார். "அறிவன்" என்ற சொல் "மற்கலி கோசரை" குறிக்கும் என்கிறார் நம் பேரா. க.நெ. ஆனால் அதற்கு அவர் எந்த சான்றுகளையும் கூறவில்லை.

மாறாக, மேலே சொன்ன முக்கிய வார்த்தைகள் சமண இலக்கியங்களில் விரவி வருவதைக் காணலாம். மேலும், அறிவன் என்ற சொல் அருகர், புத்தரரைக் குறிக்கும் தனிச் சொல். பின்னாளில் எல்லா மதங்களும் அச்சொல்லை உள்வாங்கிக் கொண்டன. தமிழில் உள்ள எல்லா நிகண்டுகளும் "அறிவன்" என்ற சொல்லை அருகற்கும், புத்தருக்கும் வழங்கி வருவதைக் காணலாம். உண்மை இவ்வாறு இருக்க நம்ம பேராசிரியரோ அச்சொல் 'மற்கலி கோசரை" குறிக்கிறது என்கிறார். எங்கே போய் ... கொள்ள? இது முழுப் பூசணிக்காயைசோற்றில் மறைப்பது போலாகும். :-)

அதுபோல் இன்னொன்றையும் ஈண்டு சொல்லலாம். "திருமூக்குடை" - மூன்று குடைகள். அருக பெருமானுக்கே உரித்தான ஒன்று. அருகருக்கு சிறப்பாக கூறப்படும் அதிசயங்களில் ஒன்று! அருகன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாகையால் குறியீடாகக் குறிக்க மூக்குடைகள் அமைப்பது ஜைன சம்பிரதாயம். சிற்ப சாத்திரத்தில் அருகனுக்கே இக்குறியீடு உண்டு. வேறு எந்த கடவுளுக்கும் இந்த குறியீடு கிடையாது. அப்படியிருக்குமானால் அவற்றை சுட்டினால்அமைய பெறுவேன். மற்கலி கோசருக்கு அவ்வாறு குறியீடு இருந்தால் பேரா.க. நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் சுட்டவேண்டுகிறேன்! "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" ;-)

சரி, சமண தமிழ் இலக்கியங்களில் பிண்டி, முக்குடைப் பற்றியப் பாடல்கள் பரவலாக வழங்கி வருவதையும் பார்க்கலாம்.

1." மின்னார் முத்து மணிமாலை
மிளிருங் குடைமூன் றுடையானை .... "
- தோத்திரத் திரட்டு

2. "பெருநாள் மதிபோல் நிலவுமுக் குடையாய்
பிழைபடா நெறியாய் பிறவிவேர் குறுவாய்
முருகுலா மலர்மேல் வருதிக பரனே!"
- மந்திரப் பத்து

3. " முத்தொளி முக்குடையாய் மூவுலகு ஆளுடையாய்
உத்தமனே அருகா உன்பதமே சரணம் ..... !"
- சரணப் பத்து

4. " திகழ்பூப் பிண்டி நிழலுடையாய்
திக்கே யுடையாய் முக்குடையாய் ..........!"
- அருகர் பத்து

5. " பேதையர் காதம் பிணைக்கறுக்கும் பூம்பிண்டி
நாதனை முக்குடைக்கீழ் நாயகனைக்-காதிவினை .........!"
- திரு இரட்டை மணி மாலை

6. " உலர்தழைப்ப ஒளிதிகழ்மூ வாமதிமுக் குடையானை அடலார் ஆழ் வலர்தழைக் கும்வண் மயிலை மன்னவனை, மணியை, முன்னாது ......!"
- திருமயிலாப்பூர்ப் பதிகம்

7. " கொலையிலா நெறிவேந் தனே ஒளி
குலவு முக்குடை யாளனே!
நிலையனே திருமயிலை மேவிய
நேமி நாத சுவாமியே!"
- திருமயிலை நேமிநாதசுவாமி பதிகம்

8. " முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டெருத்தின்
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காதார் அன்றே!"
- சீவக சிந்தாமணி (2740)


சிற்பச் சான்று இங்கே பார்க்கவும்.

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=16

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=14

தொடரும்...

Friday, November 10, 2006

சமணம் எதுவோ?

சமணம் எதுவோ?


"அந்நெறி எதுவோ செந்தண் சைனம்;
சைனம் ஒருமதச் சார்பின தன்று;
சைனம் எதுவெனச் சாற்றுவன் இங்கே;
ஐம்புலன் வெல்லும் செம்மை சைனம்;
ஒழுக்கம் காக்கும் விழுப்பம் சைனம்;
கொலைகள் ஒழித்து நிலைபெறல் சைனம்;
கள்பொய் காமம் தள்ளல் சைனம்;
ஊனுண் ணாத மேனிலை சைனம்;
வெறியா வேசம் முறியிடம் சைனம்;
சாந்த அமுதம் மாந்தல் சைனம்;
நன்லெணம், நல்வழி, நற்பணி சைனம்;
பிறர்க்கென வாழும் திறத்துறை சைனம்;
தேவை அளவை மேவல் சைனம்;
அகிம்சா தர்மம் அனைத்தும் சைனம்;
இந்தச் சைனம் எந்த மதமோ?
மக்கட் குரிய தக்க பொதுமை!"


மேலே கூறியப் பாடல் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களால் இயற்றப்பட்டது. எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் இருந்து எடுத்து இங்கே தரப்படுகிறது!


இரா.பானுகுமார்,
சென்னை.

Monday, November 06, 2006

ஆசிவகம் 2

சமீபத்தில் கொளப்பாக்கம் என்னும் கிராமத்தில் (சென்னை அடுத்த போரூர் பகக்ம்) இரு தீர்த்தங்கரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கீழே உள்ள வலைச்சுட்டியில் பார்க்கலாம்.

http://www.hinduonnet.com/2006/02/12/stories/2006021200332000.htm

தொல்பொருள் துறையினர் இதை "புத்தர் சிலைகள்" என்று தவறாக செய்தி வெளியிட்டனர். ஆனால் அவைகள் "தீர்த்தங்கரர் சிலைகள்" என்று தியோடர். பாஸ்கர் என்பவர் இந்து நாளிதழுக்கு பின்னூட்டு அனுப்பினார். கீழ் வலைச்சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/14/stories/2006021401631000.htm

தொல்பொருள் துறை தவறாக செய்தி வெளியிட்டது என்று தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் திரு. பாஸ்கரனுடைய பதிலையும் கருத்தில் கொள்ளாமல் வீம்புக்கு அது புத்தர் சிலைகள் தான் என்று தொல்பொருள் துறை மீண்டும் அறிக்கைவிட்டது. கீழே சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/18/stories/2006021805531100.htm

ஏன் இந்த வீம்பு?

செய்தித் தாளில் படங்கள் சரியாக தெரியாததால், சரி நாமே நேரில் சென்று பார்க்கலாம் என்று நண்பர் திரு. திருப்பதி சாமியுடன் கொளப்பாக்கம் சென்றேன். சிலைகள் பிறந்த மேனியுடனே தான் இருந்தன. அவைகள் நிச்சயமாக தீர்த்தங்கரர் சிலைகள் தான். பின் ஏன் இந்த முரணான செய்தி.
தொல்பொருள் துறையில் கரண்டி (:-) போட்டதில் உண்மை வெளியானது. என்னவென்றால்?

கடந்த ஆண்டு முழுவதும் கிடைத்த சிலைகள் 96% ஜைன சம்பந்தப்பட்டதாக இருந்தது. கடுப்பாகி போன தொல்பொருள் துறையில் உள்ள சில அதிகாரிகள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) "என்னடா இது எந்த இடத்தில் பார்த்தாலும் ஜைனமாவே இருக்குது" என்று இந்த சிலைகளை மாற்றி சொல்லிவருகிறார்கள். இனி கிடைக்க போகும் சிலைகளுக்கும் இந்த கதி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த சிலைகள் ஆவணத்தில் புத்தர் சிலைகள் என்றே இருக்கும். "எருது குதிரை ஆனாற்போல்" ;-)

ஆசிவகம் என்ற தலைப்பை கொடுத்துவிட்டு இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். இன்னும் இதுபோல் ஏராளமாக உள்ளன.

ஆசிவகம் தமிழ் நாட்டில் இருந்ததுதான். அதற்கு சான்றுகள் உள்ளன. அது வேறு செய்தி. ஆனால் சமண (ஜைன) முனிவர்கள் வாழ்ந்த குகைகளை ஆசிவகத்திற்கு ஏற்றி ஏன் சொல்கிறார்கள் என்றால் "திட்டமிட்டு சமண தொடர்புடையவைகளை அழித்துவிட்டு" அவைகளை ஆசிவகமாக மாற்றி, கடைசியில் ஆசிவகம் "இந்து" மதத்தில் ஒரு பிரிவு என்று சொல்லிவிட்டால், கிடைக்கும் எல்லா சமண தொல்பொருள் சான்றுகளும் இந்து மத ஆதாரமாக போகும் ஆகையால். இது முற்றிலும் உண்மை. தமிழ் நாட்டில் சமண சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பது நிதர்சன உண்மை. ஒன்றை புரிந்துக் கொள்ளவேண்டும். சமண சின்னங்கள் அழிந்தால் 'தமிழ் நாட்டு" தொன்மையும் சேர்ந்து அழியும்".

"கணியன் பூங்குன்றனாரின்", "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற பாடல் அப்பட்டமான சமணப் பாடல். சமண கருத்துக்கள் நிறைந்தப் பாடல். அதை வேண்டுமென்றே "ஆசிவகம்" சார்ந்தது என்று புனைந்துரைக்கிறார்கள். அதுபோலவே, " நாலடியார்" ஒரு சமண நூல். அதையும் சிலர் "அறிஞர்கள்" ஆசிவகம் என்கிறார்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். அதையும் திரித்து அவர்களை இந்துவாக மாற்றிவிட்டார்கள். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவைகளை பின்னர் பரிமாறிக் கொள்கிறேன்.



இரா.பானுகுமார்,
சென்னை.

Friday, November 03, 2006

நா. கணேசனார் அவர்கள்

யான் அகத்தியத்தில் எழுதும் முன்னரே அவருடைய எழுத்தைப் படித்திருக்கிறேன். பல பழைய நூற்களை பதிப்பித்திருக்கிறார். நல்ல படிப்பாளி! நிறைய புத்தகங்களை சேர்த்தும் வைத்திருக்கிறார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பிறவிப் பயனே!

அகத்தியத்தில் எழுத ஆரம்பித்தபின் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுருக்கமாக எழுதுவார். "திருவள்ளுவர் சமணர்" என்ற தொடர் எழுதும்போது எங்கள் நட்பு வளர்ந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு இந்துவானவர் திருக்குறள் சமணம் சார்ந்தது என்று துணிந்து கூறுவதோடு மட்டுமல்லாமல் அந்த கருத்தில் கடைசிவரை உறுதியாக இருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். யாருக்கும் அந்த மனசு வராது.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன்னுடைய "திருக்குறள் - புதிய உரை" என்ற புத்தகத்தில் (முதற்பதிப்பு) முன்னுரையில் திருவள்ளுவர் "சமணர்" என்றும் கடவுள் வாழ்த்து னிச்சயம் சமணம் என்றும் எழுதினார். சில மேடைகளிலும் பேசியுமுள்ளார். ஆனால், அவருடையக் கருத்துக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தவுடன் தன்னுடைய மற்ற பதிப்புகளில் அந்த வாக்கியங்களை சேர்க்காமல் விட்டுவிட்டார்.

ஆனால், திரு.கணேசனார் அவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தன்னுடைய கருத்தை மறைத்துச் சொல்லவில்லை.

எங்களுடையதை எங்களது என்று சொன்ன கணேசனாருக்கு எங்கள் சமூகம் (தமிழ் ஜைனம்) மிக கடமைப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். ஞாபகம் உள்ள வரையில் மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள், பவ்விய சீவன் உ.வே.சா அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள், திரு. வேணுகோபாலனார் அவர்கள், திரு. வையாபுரி அவர்கள், திரு.கா.நா. சுப்பிரமணியம் அவர்கள், புலவர். செ.இராசு அவர்கள்...... போன்றோர்களுக்கு தமிழ் சமணம் என்றும் என்றும் கடமைப்பட்டுள்ளது.



இரா.பானுகுமார்,
சென்னை.

என் எழுத்து

நான் முதன்முதலில் எழுத ஆரம்பித்தது 'Soc.culture' ல். புனைப்பெயரில் தான் எழுதினேன். ஆனால், மருத்துவர் ஐயா (டாக்டர்.ஜெயபாரதி) வழி நடத்தும் "அகத்திய" யாஹீ குழுமத்தில் எழுத தொடங்கியப் பின் தான் வலைவுலகிற்கு என் பெயர் தெரிய வந்தது.

"அகத்தியம்" என்னுடைய குருகுலம் என்றால் அது மிகையாகாது. அங்கே நிறைய கற்றுக்கொண்டேன். அவ்வகையில் நான் டாக்டர் ஐயாவிற்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அகத்திய அன்பர்களுக்கும், ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.


எதிர்வரும் பின்னூட்டுகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று முதலில் அறிவுரை சொன்னவர் டாக்டர். யெஷ்வந்து மல்லையா அவர்கள் தான். (சமண வரலாற்றில் அவர் அறிவு பரந்துப்பட்டது.) கோபப்படாமல் "கூலாக" எழுத வேண்டும் என்றும் சொன்னார். இப்போது வரும் எதிர் பின்னூட்டுகளுக்கு கோபப்படுவதில்லை. பதிலாக பரிதாபமே மேலிடுகிறது.



இரா.பானுகுமார்,
சென்னை

ஆசிவகம் 1

ஆசிவகம்

ஆசிவகத்தை தோற்றுவித்தவர் "மற்கலி கோசர்" என்பார். இவர் மகாவீரர், புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சில காலம் மகாவீரரின் சீடராக இருந்தவர். பின், மகாவீரரிடம் கருத்து வேறுபாடு* காரணமாக தனியாகப் பிரிந்து ஆசிவகக் கோட்பாட்டை உருவாக்கினார்.

(* பகவதிச்சூத்திரம் என்னும் ஜைன (சுவேதாம்பர பிரிவு) நூலில் கூறப்பட்டு இருக்கிறது.)

ஆசிவகம் சிரமண மதங்களின் ஒரு பிரிவாகக் கருதப்படுகிறது. அதென்ன சிரமண மதங்கள் என்கிறீர்களா? அக்காலத்தில் வழங்கிய மதங்களை ஒருவாறு இரு பிரிவாகப் பிரித்துவிடலாம். ஒன்று வேதத்தை ஏற்றுக் கொண்ட மதங்கள் - வைதிக மதங்கள் என்றும், மற்றொன்று வேதத்தை மறுத்த மதங்கள் - சிரமண மதங்கள் என்றும் பிரிக்கலாம். இப்பகுப்பு முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது.

ஆசிவகம் சிரமண மதங்களில் ஒரு பிரிவாகக் கருதப்பட்டாலும். அது கோட்பாட்டில் வேறுப்பட்டே இருந்தது. சிரமண மதங்களில் காலத்தால் வெகு பழமையானது சமணமே (ஜைனம்). சமண மதத்திலிருந்தே மற்ற மதங்கள் பிறந்ததனால் அவைகள் (பெளத்தம் மற்றும் ஆசிவகம்) சிரமண மதங்கள் எனப்பட்டன.

சிரமண மதங்கள் ஒரே பிரிவாக இருந்தாலும், அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டே வந்திருக்கின்றன. சமணர்கள், ஆசிவகர்களை "ஏகாந்தவாதிகள்" என்றும், பெளத்தர்களை "சூன்யவாதிகள்" என்றும் அழைத்தது. பெளத்தர்கள், ஆசிவகர்களை "மற்கலியர்கள்" என்றும் சமணர்களை " னிகண்டவாதிகள்" என்றும் அழைத்தது.

"மஜ்ஜிமினிகாயா" என்ற பெளத்த னூல் சமணர்களையும், ஆசிவகர்களையும் மிக தெளிவாக பிரித்துக் காட்டுகிறது. ஆனால், பிற்காலத்து னூலாசிரியர்கள் சமணர்களுக்கும், ஆசிவகர்களுக்கும் வேறுபாடு (வித்தியாசம்) தெரியாமல் இருவரும் ஒரே பிரிவினர்கள் என்று எழுதிப் போந்தார்கள். இதற்கு மேல் நாட்டறிஞர்களும் விதிவிலக்கல்ல. "சிவஞான சித்தி" என்ற சைவ நூலிலும் இந்த வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றே என்று எழுதியிருக்கிறார்கள். மேல் நாட்டு அறிஞரான டாக்டர். ஏர்னல் என்பார் ஒரு கட்டுரையில் இருவரும் ஒருவரே என்று எழுதியிருக்கிறார். ஆனால், யாரும் தங்களின் கருத்துக்கு சான்று தரவில்லை. ஒரு வேளை இரண்டு பிரிவினரும் அம்மணமாக இருந்ததினால் வெளித் தோற்றத்தை வைத்து இருவரும் ஒருவரே என்றனர் போலும்.

தோற்றத்தில் இருவரும் ஒரே கோலமாக இருந்தாலும் கோட்பாட்டில் இருவரும் நேர் எதிர்.

பெளத்தர்கள், ஆசிவகர்களை மிக கண்டித்திருக்கிறார்கள். ஏன்! புத்தரே அவர்களை கண்டித்திருக்கிறார். புத்தர், " அவர் (மற்கலி) துறவறம் ஏற்றவர்கள், பெண்டிரிடம் உடல்வுறவுக் கொள்ளலாம்" என்று போதித்தவர், ஆதலால் அவர்களை விட்டு விலகி இருங்கள்" என்று தன்னுடைய சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆசிவகர்கள் "சமணர்கள்" என்று அழைக்கப்பட்டார்களா? ஏன் இந்த கேள்வி என்றால்? இப்போதெல்லாம் பல அறிஞர்கள் சமணர்கள் (ஜைனர்கள்) வாழ்ந்த குகைகளை ஆசிவகர்கள் வாழ்ந்த குகைகள் என்று புனைந்துரைத்து வருகிறார்கள்.

ஏன்?

தொடரும்.............. ;-)


இரா.பானுகுமார்,
சென்னை.

சமணர் - அமணர்


சமணர் - அமணர்


அமணர் என்பது தூய தமிழ்ச் சொல். இச்சொல் சமணர் என்ற சொல்லுக்கு நேர் பொருள் என்று நிறைய அறிஞர்கள் கருதுகிறார்கள். இது தவறு. "ஸமண்" என்பது பிராகிருதச் சொல்.

இதற்கு "முயற்சி"என்பது பொருள். "ஸமண்" என்ற சொல்லோடு ஆர் விகுதி சேர்த்துதமிழில் "சமணர்" என்று வரும். தமிழ் உச்சரிப்பும் பாகத (பிராகிருத)உச்சரிப்பும் மிகுந்த நெருக்கம் உண்டு.

சமணர் என்றால் "முயற்சியாளர்" என்று பொருள். இச்சொல் பொதுவாக இல்லற நோன்பிகளையும், துறவற விரதிகளையும் குறிக்கும் பொதுச் சொல். ஆனால் "நிர்கந்த" என்றால் "அமணம்" என்று பொருள்படும். "நிர்கிரந்த" என்பதற்கு ஆடை அணிகளற்ற, திகம்பரம் என்பது. நிர்கந்தர் என்றசொல் துறவிகளைக் குறிக்கும்.


"துக்கம் துடைக்கும் துகளறுகாட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரல் பண்ணி "
- வளையாபதி


அதுபோல "ஸமணர்" என்ற சொல் ஜைனத்தின் இரு பிரிவுகளையும்குறிக்கும். பெளத்தம், ஆசிவகம் ஆகியவற்றிக்கு "தாய்" சமணம். சமணம் என்றால் அது ஜைனமே! பெளத்த நூற்களில் ஜைனத்தைக் குறிக்க "ஸமண" என்ற சொல் வழங்கப்படுகிறது.


அன்புடன்,


இரா.பானுகுமார்,
சென்னை.

தமிழ்நாடு என்ற பெயர்

அன்பர்களே!


நம் தமிழ்நாடு உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து கொண்டாடும் நேரத்தில் இதை தெரிந்துக் கொள்ளலாமே! :-)


தமிழுக்கு இலக்கணம் கூறும்போது தமிழ் வழங்கிவரும் நிலப்பகுதிகளை கூறுவார்கள். இருப்பினும் அவைகள் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, கொங்குநாடு என்று பிரிந்தே இருந்தன. இவையாவற்றிலும் தமிழ் வழங்கி வந்தாலும் யாரும் "தமிழ்நாடு" என்றுஅழைக்கவில்லை.

அக்காலத்தில் எந்த நாட்டவன் என்றால்? தாங்கள் சார்ந்த நாட்டைக்சேர்த்து சேர நாட்டவன் என்றோ அல்லது சோழ நாட்டவன் என்றோ தான் கூறுவர்.
முதன்முதலில் "தமிழ்நாடு" என்று பொதுமைப்பட குறிப்பிடுகிறது " நேமிநாதம்" என்ற இலக்கண நூல். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் "குணவீர பண்டிதர்" என்ற ஜைனமுனிவரால் எழுதப்பட்டது.


அன்புடன்,



இரா.பானுகுமார்,
சென்னை.